India

“புகார் கொடுத்த கிரண்பேடியை முதலில் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” - நாராயணசாமி ஆவேசம்!

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :

“தற்போது புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் காலை 6 மணியில் இருந்து 5 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் வெளியே வருவது கட்டுக்குள் உள்ளது.

புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலம் செல்வதற்க்கும், வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மதுக்கடைகள் திறப்பது குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்படும். மதுவுக்கும், பெட்ரோலுக்கும் கோவிட் வரி விதிப்பது குறித்து நாளை அறிவிக்கப்படும்” என்றார்.

மேலும், “புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் செயல்பாடு அரசுக்கு களங்கம் ஏற்படவேண்டும் என்பதாக உள்ளது. சி.பி.ஐ முதலறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணை நிலை ஆளுநர் அறிக்கை கொடுத்துள்ளார். தன்னுடைய பதவிக்கு, தகுதிக்கு ஏற்ப வேலை செய்யாமல், அதிகாரிகளின் நேரத்தை வீணாக்கி, நிர்வாகத்தை சீர் குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி துரோகம் செய்து வருகிறார். புகார் கொடுத்த கிரண்பேடியை முதலில் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இது அவரது பதவிக்கு அழகல்ல.

அதிகாரிகளை மிரட்டுவதும், பொய் வழக்கு போடுவதும், சி.பி.ஐ-யை தொடர்புகொண்டு வழக்கு போட சொல்வதும் அவர் வேலையில்லை. அவர் செயல்பாடு குறித்து முழுமையான அறிக்கையை பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் இதற்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.

Also Read: ''புதுச்சேரி சாலைகளை ஓவியமாகத் தீட்டும் முன்னாள் அமைச்சர்'' - ஊரடங்கில் பீறிடும் கலைமனம்!