India

மோடி அரசு மக்களை ஏமாற்றி வருகிறது - கட்சியை விட்டு விலகினார் லடாக் பா.ஜ.க தலைவர் செரிங் டோர்ஜய்!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க முன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிக்கும் அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக செயல்படவில்லை.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான நிவாணத்தை வழங்காமலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையும் எடுக்காமலும் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் அதன் லடாக் மக்களை அழைத்து வர யூனியன் பிரதேச நிர்வாகம் தவறிவிட்டதாக கூறி லடாக் பா.ஜ.க தலைவர் செரிங் டோர்ஜய் ஞாயிற்றுக்கிழமை கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் நோயாளிகள், யாத்ரீகர்கள் மற்றும் யு.டி.யைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட சுமார் 20,000 பேர் உள்ளனர். அவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசாங்கத்தை ஆட்சி செய்யும் கட்சியில் இருப்பது தேவையற்றது எனக் கூறி தனது ராஜினாமா கடித்தை செரிங் டோர்ஜய் பா.ஜ.க தலைமையிடம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செரிங் டோர்ஜய் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நாடாவுக்கு எழுதிய கடிதத்தில், “லடாக்கில் நிர்வாகம் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்காமல் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லடாக் ஆளுநர், பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் மற்றும் லடாக் கட்சி விவகாரங்களுக்கான பொறுப்பாளர் அவினாஷ் ராய் கன்னா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டனர்.

ஆனால், அவர்கள் முழு முயற்சியுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாகம் எந்த நம்பிக்கையும் எங்கள் பகுதிமக்களுக்கு அளிக்கவில்லை. இந்த நிர்வாகத்தை நம்பி பயனில்லை” எனக் குறிப்பிட்டு கட்சியில் இருந்து விலகும் முடிவை அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகத்தின் உரிமைக்கு ‘சமாதி’ எழுப்பும் பா.ஜ.க - ஜல் சக்தி துறையுடன் காவிரி ஆணையம் இணைக்க வைகோ கண்டனம்!