India

“வங்கி கடன் மோசடி பட்டியல் வெளியாக தாமதமானது இதனால்தானா?” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

வங்கி கடன் மோசடி செய்தவர்களில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பா.ஜ.க.வின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடன் பெற்று மோசடி செய்தவர்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 50 பேரின் விவரங்களை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. சமூக ஆர்வலர் சாகத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கேட்ட கேள்விக்காக இந்தத் தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்டோரது பெயர்களும், அவர்களது நிறுவனங்களும் கடன் விவரமும் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரத்தை வைத்து மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “நான் நாடாளுமன்றத்தில் மிக எளிதான கேள்வியைத்தான் கேட்டேன். வங்கிக் கடன் மோசடி அதிகம் செய்த முதல் 50 பேரின் பட்டியலை வெளிளியிடுமாறு கூறினேன்.

இதற்கு நிதியமைச்சர் பதில் ஏதும் அளிக்கவில்லை. தற்போது ரிசர்வ் வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பா.ஜ.கவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இதனால்தான் இந்த விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: வங்கிகளை ஏமாற்றிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு: அதிர்ச்சி தகவல்!