India

பிரதமரின் பேச்சை தொடர்ந்து மீறும் பா.ஜ.கவினர் - சமூக விலகலை கடைபிடிக்காமல் நிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்தியும் வருகின்றனர்.

இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாமானியர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலிஸார் ஆளுக்கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் கூட பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஜெயராம் ஊரடங்கு உத்தரவை மீறி தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ளியில் பிரியாணி விருந்து வைத்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் ஹொன்னாலி தொகுதியில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, சமூக சுகாதாரப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஹொன்னாலி தொகுதி எம்.எல்.ஏ ரேணுகாச்சாரியா மற்றூம் சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அங்கு வந்த சுகாதார ஊழியர்களை தரையில் அமரவைத்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் நிவாரணம் வழங்கினார் எம்.எல்.ஏ ரேணுகாச்சாரியா. அதுமட்டுமின்றி அங்கு பல ஊழியர்கள் முககவசம் இல்லாமல் இருந்தது மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி ஊரடங்கை கடைபிடிக்கவும் சமூக விலகலை உறுதிப்படுத்தவும் அடிக்கடி வலியுறுத்திவரும் நிலையில், அவரது பேச்சை தொடர்ச்சியாக பா.ஜ.கவினர் மீறிவருகின்றனர். இதனை பிரதமர் மோடி தலையிட்டு தடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “ஊரடங்கை மதிக்காமல் ஊரைக் கூட்டி பிரியாணி விருந்து வைத்த பா.ஜ.க எம்.எல்.ஏ” - கர்நாடகாவில் நடந்த கொடுமை!