India

“ஊரடங்கை மதிக்காமல் ஊரைக் கூட்டி பிரியாணி விருந்து வைத்த பா.ஜ.க எம்.எல்.ஏ” - கர்நாடகாவில் நடந்த கொடுமை!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஊரடங்கு ஏப்ரல் 31ம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்தச் சூழலில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்தும், தடியடி நடத்தியும் வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாமானியர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலிஸார் ஆளுக்கட்சியைச் சேர்ந்தவர்களை விட்டுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க ஆளும் கர்நாடகாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் ஊரடங்கு உத்தரவை மீறி அரசுப் பள்ளியில் பிரியாணி விருந்து வைத்த சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் துருவகேரா பகுதியைச் சேர்ந்தவர் மசாலே ஜெயராம். இவர் கர்நாடகாவில் பா.ஜ.க சார்பில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக உள்ளார். இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக தொகுதி மக்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளார் மசாலே ஜெயராம்.

ஆனால் ஊரடங்கு காரணமாக அதிகாரிகள் அனுமதி வழங்கத் தயங்கிய நிலையில் நேற்றைய தினம் அவர் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இதற்கான விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அந்த விழாவிற்கு தொகுதியைச் சேர்ந்த மக்களை எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் அழைத்து வந்துள்ளனர். பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளன. அந்த விழாவின்போது கேக் வெட்டிய எம்.எல்.ஏ ஜெயராம் தனது ஆதரவாளர்களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார்.

பள்ளி மாணவர்களையும் பங்கேற்க வைத்து அவர்களுக்கும் கேக் ஊட்டிவிட்டார். பின்னர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தயார் செய்திருந்த பிரியாணியை அங்கு கூடியிருந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கினார். மக்கள் 1 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படும் வேளையில், கூட்ட நேரிசலில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு சமூக விலகலை கடைபிடிக்காமல் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

பிறருக்கு உதாரணமாக இருக்கவேண்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே இதுபோல விளம்பரத்திற்காக ஊரடங்கு நேரத்தில் விதிமுறைகளை மீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் பேச்சை சொந்தக் கட்சிக்காரர்களே கேட்காத அவல நிலைதான் இந்தியாவில் நிகழ்வதாகவும், ஊரடங்கை கடைபிடித்த பொதும்மக்களை வீட்டை விட்டு வெளியே அழைத்துவந்த எம்.எல்.ஏ ஜெயராம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: “அரசின் நிதிநிலைக்கும் கொரோனா வந்துவிட்டதா? ஏன் இந்த ஏற்பாடு?” - பா.ஜ.க அரசால் அல்லல்படும் மக்கள்!