India

“மக்களின் வாழ்க்கைக்கு அரணாக இருக்க வேண்டும்” : நலம் விசாரித்த பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்தார்.

பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதற்குப் பதிலளித்துப் பேசிய மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு வந்துள்ளது என்றும், அக்கூட்டத்தில் நாடாளுமன்ற தி.மு.க குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும் என்று பிரதமரிடம் தி.மு.க தலைவர் கேட்டுக் கொண்டார். அதற்கு மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது என்று பிரதமரும் உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தி.மு.க தலைவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

Also Read: “கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்” - அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!