India

“மகாராஷ்டிராவிலிருந்து 500 கி.மீ. நடந்து வந்த தமிழக மாணவர் பலி” : அரசின் அலட்சியத்தால் தொடரும் கொடூரம்!

கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநில எல்லையில் இருந்து பல மாநில எல்லைகளைக் கடந்து தங்களது வீடுகளுக்கு செல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் முற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 22 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முழு ஊரடங்கு காரணமாக கடைகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து சேவைகள் என அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படியான சூழலில் ஏராளமான தினசரிக் கூலித் தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் அதிகப்படியானோரும் எந்தவிதமான வாழ்வாதார வசதியோ அல்லது தங்குமிடமோ இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். அப்படியாக புலம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் கால்நடையாக நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

இப்படி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்களை காவல்துறையினர் ஊரடங்கை மீறி வெளியில் சென்றதற்காக காவல்துறையினரின் கெடுபிடிகள், தடியடிகள், தோப்புக்கரண தண்டனைகள், சிறைபிடிப்புகள் போன்றவற்றை வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன.

300 கி. மீ தொலைவைத் தாண்டி தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக மக்கள் நடந்து செல்லும் வேளையில் உடல் சோர்வுற்று மற்றும் வாகன விபத்துகளில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 22 பேர் இறந்துள்ளதாக செய்திகள் 2 நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் நடந்துவரும் வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் கல்லூரியில் படித்துவந்த மாணவர்கள் ஊடங்குக் காரணமாக சில தினம் கல்லூரி விடுதிகளிலேயே தங்கியுள்ளனர். ஆனால் கல்லூரி விடுமுறை என்பதால் மாணவர்களுக்கு உணவு கிடைப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுத்ததால் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லும் முயற்சிகள் அனைத்தும் தடை ஏற்பட்டது. இதனால் சில மாணவர்கள் மற்றும் கையில் இருந்த உணவுகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தமிழகத்திற்கு நடந்தேவருவது என முடிவு செய்தனர். அந்த மாணவர்களுடன் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த மாணவர் லோகேஷ் என்ற மாணவனும் நடந்துவந்துள்ளார்.

தெலங்கானாவின் செகந்திராபாத் வழியே வரும்போது லோகேஷ் போவன்பள்ளி சந்தையில் நின்றுள்ளனர். அவர்களை உள்ளூர் பிரமுகர்கள் மேற்கு மாரட்பள்ளியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர். அங்கு ஏற்கனவே 176 பேர் இருந்தனர்.

இந்த நிலையில், அங்கிருந்த லோகேசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் வருவதற்குள்ளாக லோகேஷின் உயிர் பிரிந்துள்ளது.

இதுதொடர்பாக அவருடன் பயணித்த நண்பர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் 3 நட்களாக நடந்துவருகின்றோம். எப்படியாவது ஊருக்குச் செல்லவேண்டும் என நினைத்து அழைந்தோம் ஆனால் போக்குவரத்து வசதி ஏதும் கிடைக்கவில்லை. செல்லும் வழியில் சிலர் உணவு அளித்தார்கள். அதிலும் வாகனத்தில் சென்ற சிலர் எங்களை அவர்களுடைய வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள். ஆனால் போலிஸார் அவர்களையும் பிடித்து அடித்தார்கள்.

சமூக விலகல் அவசியம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் இப்படி கிளம்பி வந்து விட்டோம். எங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லாவிட்டால், குழுவாக இருக்கும் எங்களுக்கு வராத கொரோனாவும் வந்து விடும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஊரடங்கு உத்தரவால் இதுவரை 17 புலம்பெயர் தொழிலாளர்கள்; 4 குழந்தைகள் பரிதாப பலி : வெளியான அதிர்ச்சி தகவல்!