India

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-75% குறைப்பு - கொரோனாவால் ஏற்பட்ட ரூ.12,000 கோடி இழப்பை ஈடுகட்ட அதிரடி!

கொரோனா அச்சம் காரணமாக 21 நாட்கள் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் சமூகப் பரவலை தடுக்கும் விதமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அநாவசியமாக மக்கள் பொதுவெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கால் மாநில அரசுக்கு விளையும் நஷ்டத்தை சமாளிக்கும் விதமாக தெலங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக நேற்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் பிரகதி பவனில் நடைபெற்றது. அப்போது. ஊதிக்ய குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் சந்திரசேகர ராவ்.

அதன்படி முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.சிக்கள், மாநகராட்சி மேயர்கள், ஊரக அல்லது பஞ்சாயத்து தலைவர்களுக்கு 75 சதவிகித சம்பளம் குறைக்கப்படும்.

அதேபோல, அரசுப் பணியாளர்களான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஏ.ஐ.எஸ் ஆகிய அதிகாரிகளுக்கு 60 சதவிகிதமும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 50 சதவிகித ஊதியமும் குறைக்கப்படுகிறது.

மேலும், நான்காம் நிலை பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 10 சதவிகிதமும், 4வது நிலையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தில் இருந்து 50 சதவிகிதமும், இதர அரசு ஊழியர்களின் நிலை படி 10 முதல் 50 சதவிகித என ஏப்ரல் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

ஊரடங்கால் ஏற்படும் 12 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக இந்த சம்பளக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஹஜ் யாத்திரை செல்ல பல ஆண்டுகளாக சேமித்த ரூ. 5 லட்சத்தை கொரோனா நிவாரணமாக வழங்கிய மூதாட்டி! #CoronaRelief