India

’பா.ஜ.க பிரமுகர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருங்கள்’ : பேனர் வைத்து பதிலடி கொடுத்த CAA எதிர்ப்பாளர்கள் !

உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல இடங்களில் பொது சொத்துக்கள் சூறையாடப்பட்டது.

தற்போது மாநிலத்தில் போராட்ட நிலைமைகள் குறைந்துள்ள நிலையில், கடந்த வாரம் உத்தர பிரதேசத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு சார்பில், பொதுச்சொத்துக்களை சூறையாடியவர்கள் என இஸ்லாமியர்களின் புகைப்படத்தை வீட்டு முகவரியோடு அச்சிட்டு மிகப் பெரிய பேனர்களை லக்னோவின் பல பகுதிகளில் வைத்துள்ளனர்.

மேலும், பொதுச்சொத்துக்களுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்கவில்லை எனில் உங்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடும் வாசகங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பேனர்களை நீக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

இதனிடையே ,பேனர் வைத்த விவகராம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. மேலும் வழக்கு விசாரணையின் போது, சொந்த மாநில மக்களை ஆளும் அரசு அவமதிக்கிறது, தனிநபர் சுதந்திரத்தை மீறி செயல்பட்டுள்ளதுள்ளதால் பேனர்களை அகற்றவேண்டும் என எச்சரித்தது.

ஆனால், நீதிமன்றத்தை மதிக்காத உத்தர பிரதேச பா.ஜ.க அரசு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் இதுபோல பேனர் வைக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது, சட்டத்தில் இதற்கு இடம் உண்டா? என கேள்வி எழுப்பியதோடு தனது கண்டனத்தைப் பதிவு செய்து வழக்கைத் தலைமை அமர்வுக்கு மாற்றியது.

இதுதொடர்பான வழக்கு அடுத்தவாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அரசு வைத்திருக்கு பேனர்களுக்கு பக்கத்தில் போராட்டக்காரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் புதிதாக மற்றொரு பேனரை வைத்துள்ளனர்.

அந்த பேனரில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் உன்னாவ் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மற்றும் சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பா.ஜ.க முன்னாள் மத்திய இணை அமைச்சர் சாமியார் சின்மயானந்த் புகைப்படங்களை வைத்து அந்த பேனர் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் அதில், “இதில் இருப்பவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள். எனவே பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பா.ஜ.கவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பேனர் வைத்து போராட்டக்காரர்களை அவமதிக்க உ.பி அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?”- சுப்ரீம் கோர்ட் கண்டனம்