India

“பேனர் வைத்து போராட்டக்காரர்களை அவமதிக்க உ.பி அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?”- சுப்ரீம் கோர்ட் கண்டனம்

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றபோது பா.ஜ.கவினர் இந்துத்வா கும்பலை ஏவி போராட்டக்காரர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

அந்த சமயத்தில் பொதுச் சொத்துகளை சேதம் விளைவித்த போராட்டக்காரர்களிடம் நஷ்ட ஈடு வசூலிக்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டு லக்னோ மாவட்ட நிர்வாகத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோரின் பெயர், புகைப்படங்களுடன் கூடிய பேனர்களை நகரின் பல்வேறு பகுதிகளில் வைத்தனர்.

பேனரில், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதற்காக நஷ்ட ஈடு வழங்காவிடில் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்டு எரிச்சலடைந்த அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவியது.

இதனால், தங்கள் அனுமதியின்றி, பொதுவெளியில் தங்களின் அடையாளங்களை வைத்துள்ளது கண்டனத்திற்குரியது என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். மேலும், உத்தர பிரதேச அரசின் இந்தச் செயலால் வன்முறையாளர்கள் மேலும் எங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி ரமேஷ் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த பேனர் வைத்த விவகாரத்தை தாமாக முன்வந்து நேற்று விசாரித்தனர்.

அப்போது, இது தனிநபர் உரிமைகளைப் பறித்து, அவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளைக்கும் செயல். இந்த நடவடிக்கை குடிமக்களை அவமதிக்கும் செயலாகும். எந்த அடிப்படையில் இவ்வாறு பேனர்கள் வைக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் லக்னோ போலிஸ் கமிஷனர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், உடனடியாக லக்னோ நகரில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றவும் உத்தரவிட்டனர்.

அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உத்தர பிரதேச அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு விடுமுறைகால அமர்வான நீதிபதிகள் லலித், அனிருத்தா போஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றக்கருத்தும் இல்லை. ஆனால், போராட்டக்காரர்கள் குறித்த சுய விவரங்களை பேனர் வைத்து விளம்பரப்படுத்தலாம் என எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.

இது போன்ற பேனர்களை பொது வெளியில் வைக்க உத்தர பிரதேச அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அலகாபாத் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு தடை ஏதும் விதிக்க முடியாது எனக் கூறி இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு அடுத்த வாரம் விசாரிக்கும் எனக் கூறி ஒத்திவைத்தனர்.

Also Read: பேனர் வைத்து குடிமக்களை அவமதிப்பதா? - உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் கண்டனம்!