India

“CAA விவகாரத்தில் அகந்தையோடு செயல்படக்கூடாது” : மோடி அரசுக்கு டி.ராஜா எச்சரிக்கை!

விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜா, “குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், ஏழைகள் என அனைவருக்கும் எதிரான சட்டம்.

மேலும் டெல்லி கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரனை நடத்தப்பட வேண்டும். கலவரத்தை தூண்டுவிதமாகப் பேசிய பா.ஜ.க அமைச்சர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. டெல்லி கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் என அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அரசு விவாதிக்கத் தயாராக இல்லை.

மத்திய அரசு அகந்தையோடு செயல்படக்கூடாது. உடனடியாக சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், “தற்போது பொருளாதார நெருக்கடி இருக்கும் சூழலில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. மோடி அரசு பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் தோல்வியடைந்துள்ளது.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என மோடி சொன்னார். ஆனால், தற்போது அதைப்பற்றிப் பேச மறுக்கிறார். விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என மோடி பேசினார். ஆனால், விவசாயிகள் தற்கொலைதான் அதிகரித்துள்ளது.

மோடி அரசு, பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்கும் முயற்சிகளை எடுக்காமல் மக்களை பிளவுபடுத்தும் வேலையைச் செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “BSNL நிறுவனத்தைப் போல இரயில்வே துறையையும் சீர்குலைக்கத் துடிக்கிறது மோடி அரசு” - வைகோ ஆவேசம்!