India

"அடுத்த குறி பாரத் பெட்ரோலியம்?" : பொதுத்துறையை தொடர்ந்து சூறையாடும் மோடி அரசு! #BPCLForSale

பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், பொதுத்துறையை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் முயற்சிகள் என பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது.

மேலும் கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக ரயில்வே துறை மற்றும் அதன் அச்சகம் போன்றவற்றைத் தனியாருக்கு விற்கப்போவதாக நாடாளுமன்றத்திலேயே துணிந்து அறிவித்துள்ளது பா.ஜ.க அரசு. இதற்கு வரும் எதிர்ப்புகளை சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல் எதேச்சதிகாரப் போக்குடன் பா.ஜ.க அரசு செயல்படுகிறது எனப் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் 2-வது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பி.பி.சி.எல்) உள்ளது. நாட்டில் நுகரப்படும் மொத்த பெட்ரோலிய பொருட்களில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 21 சதவிகித பங்கைக் கொண்டிருக்கிறது. லாபத்தில் இயங்கி வரும் இந்த மாபெரும் நிறுவனத்தை தனியார்மயமாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது, இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் 53.29 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் அன்று அதன் முதலீட்டாளர்கள் குழு மூலம் ஒப்புதல் பெற்று, 2020 மார்ச் 31-ம் தேதிக்குள் பங்குகளை விற்று முடிக்க இலக்கும் நிர்ணயித்துள்ளது.

அதன்படி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு உள்ள 53 சதவிகித பங்குகளை விற்க ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. மேலும், இதில் பங்குகளை வாங்க வரும் நிறுவனங்கள் மே 2ம் தேதிக்குள் தங்களின் விலைப்புள்ளிகளை அரசுக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் இதற்கான விண்ணப்பங்களை முதலீட்டுத்துறை மற்றும் பொதுச் சொத்துகளை நிர்வகிக்கும் துறைகளிடம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளும் பங்குகளை வாங்குவோருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பொதுத்துறையை முழுமையாக தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கை என்றும், அடுத்த இலக்காக மோடி பாரத் பெட்ரோலியத்தை அழிக்க நினைக்கிறார் எனவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வங்கிகளில் அதிகரித்துவரும் வாராக்கடனால் வங்கிகள் பல திவாலாகும் நிலைமைக்குச் சென்றுள்ளன. PMB வங்கி மற்றும் YES Bank ஆகியவை கடும் நெருக்கடியால் ரிசர்வ் வங்கி கைக்குச் சென்றுள்ள நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைப்பது மோடி ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையையும் மற்றும் கார்ப்பரேட் சேவை அரசு என்பதையும் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னதாக மத்திய பா.ஜ.க அரசு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதன் மூலம், அந்த நிறுவனம் தனது மதிப்பீட்டை இழக்கும் என்று தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!