India

பிராமணர்களுக்கென தனி கழிவறை : இதிலும் சாதியா? - கேரள கோவில் நிர்வாகத்துக்கு எதிராக தொடரும் கண்டனம்!

திருச்சூரில் குட்டுமுக்கு மகாதேவ என்ற புகழ்பெற்ற கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் அண்மையில் நடந்த திருவிழா ஒன்றிற்காக அரவிந்த் என்ற ஆராய்ச்சி மாணவர் சென்றிருக்கிறார், அங்கு கோவில் வளாகத்தில் உள்ள கழிவறைகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் பிராமணர்கள் என எழுதப்பட்ட பலகைகள் இருந்துள்ளன.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர், அந்தப் பெயர் பலகைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் படம் வைரலானதோடு, கோவில் நிர்வாகத்தை கண்டித்தும் பதிவுகள் இடப்பட்டன.

இதனையடுத்து, இந்த பெயர்ப் பலகை விவகாரம் தொடர்பாக முதல் முறையாக வாய் திறந்த கோவில் நிர்வாகத்தினர் “குறிப்பிட்ட கழிவறைகள் கோவில் வளாகத்துக்கு பின்புறத்தில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

இதுவரை எந்த புகாரும், இது தொடர்பாக எழுந்ததில்லை. அதன்பொருட்டு யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த கழிவறைகளை கோவிலுக்கு வரும் பக்தர்களும், கோவிலில் பணிபுரிபவர்களுமே பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் அந்த பலகையை நீக்கிவிட்டு பணிபுரிபவர்களுக்கான கழிவறை என மாற்றிவிடுகிறோம்” எனக் கூறியிருக்கின்றனர்.

மேலும், கழிவறையிலும் சாதி பாகுபாடு பார்ப்பதா என சர்ச்சை எழுந்ததால், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தேவசம் போர்டு துணை ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தேவசம் போர்டு தலைவர் ஏ.பி.மோகனன் கூறியுள்ளார்.

Also Read: சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பான வாழ்விடம் அளிக்க கேரள அரசின் அசத்தல் திட்டம்!