India

வாராக்கடன் அதிகரிப்பால் YES வங்கியை கைப்பற்றிய ரிசர்வ் வங்கி - ‘மோடி ஆட்சியில் வங்கியே திவாலாகும் அவலம்’!

வாராக்கடன் அதிகரித்ததால் தனியார் வங்கியான ‘யெஸ் வங்கி’ கடுமையான நிதிச் சிக்கலில் தவித்துவந்தது. இந்நிலையில் ‘யெஸ் வங்கி’ முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘யெஸ் வங்கி’ நிர்வாகத்தை நிர்வகிக்க எஸ்.பி.ஐ முன்னாள் அலுவலர் பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கியின் மூலதனத்தைப் பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீண்டும் பெறுவதற்கு ‘யெஸ் வங்கி’ முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, இனி ‘யெஸ் வங்கி’க்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இந்த ஒரு மாத காலத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.

இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது எனவும் கேட்டுக்கொண்டுள்ளது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் அச்சமடைந்த வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தை எடுக்க ஏ.டி.எம் மையங்களில் குவிந்தனர்.

இதனால், யெஸ் வங்கி சர்வர் முடங்கியது. மார்ச் 5-ம் தேதி மாலை 6 மணியோடு யெஸ் வங்கி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், வங்கியின் பங்குகள் இன்று கடுமையாகச் சரிந்தன. இன்றைய காலை நிலவரப்படி யெஸ் வங்கியின் பங்குகள் சுமார் 10 சதவீதம் வரை சரிந்து, ரூ.33.20 என்ற அளவில் இருந்தது.

Also Read: “ATM கார்டே தேவையில்லை” : SBI வங்கியை தொடர்ந்து பணம் எடுப்பதில் புதிய உத்தியை அறிமுகம் செய்த ICICI வங்கி!