India

“மதக் கலவரத்தை தூண்டிவிடுகிறார்கள்” : எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்ய டி.ஜி.பி-யிடம் மனு!

தமிழகத்தில் மதக் கலவரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் பா.ஜ.க தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள பால பிரஜாபதி அடிகளாருக்கு உரிய போலிஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சென்னை வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி சட்டத்திற்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதியான முறையில் போராடி வரும் பெண்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால் வண்ணாரப்பேட்டையில் டெல்லியில் நடந்தது போன்று வன்முறை நடைபெறும் என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் போராளிகள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவரும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Also Read: “அவர்களை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும்” - வன்முறையைத் தூண்டும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் திமிர் பேச்சு!

மேலும் கிறிஸ்தவ மதத் தலைவர்களின் மீது வன்முறையை ஏவிவிடும் வகையில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் சமீபத்தில் பேசியதாகவும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் அனைவரையும் ஓட ஓட விரட்டி அடிக்கும் காலம் விரைவில் வரும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் இதற்கு கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருவதாகவும் அதில் கூறியுள்ளனர்.

எனவே சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் கலவரத்தை ஏற்படுத்தும் பேச்சுகளைப் பேசி வரும் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.

Also Read: "அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுகிறார்” - எச்.ராஜா மீது போலிஸில் புகார்!