India

“ஒரே வாரத்தில் 13 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்” : மோடி ஆட்சியில் பின்னடைவில் பங்குச்சந்தைகள்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல், இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் இருக்கின்றன.

இந்நிலையில், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால் பொருளாதாரம் மீண்டு எழும், நிச்சயம் பா.ஜ.க ஆட்சியில் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக உயரும் என வழக்கம்போல தங்கள் வசனத்தைப் பேச ஆரம்பித்தார்கள்.

அவர்களின் பொய்ப் பிரச்சாரம் நீடிக்காத வகையில், இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து வரலாறு காணாத சரிவு ஏற்பட்டு வருகிறது. தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, மும்பை பங்குச் சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தமாக 13 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர்.

சென்செக்ஸ் கடந்த பிப்ரவரி 13 அன்று 41,709 புள்ளிகள் என்ற உச்சத்தில் இருந்தது. ஆனால், அதற்குப் பிந்தைய 14 நாட்களில் சுமார் 3,300 புள்ளிகள் அளவிற்கு சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் புதன்கிழமையன்று வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 38,409 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல தேசிய பங்குச்சந்தையான ‘நிஃப்டி’, புதனன்று மேலும் 52 புள்ளிகள் சரிந்து, 11,251 புள்ளிகளுக்குப் போனது.

இதனால் கடந்த ஒருவாரத்தில் மட்டும் முதலீட்டாளர்கள் 13 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவில் பரவும் கொரொனா அச்சம் காரணமாக மேலும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும், முதலீடுகளும் குறையும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read: வரலாறு காணாத சரிவு: ஒரே நாளில் ரூ.5.53 லட்சம் கோடி முதலீடு க்ளோஸ்- மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களும் கவலை!