India

“இருவரையும் வீடு புகுந்து கொல்வோம்” : கேரள முதல்வருக்கும், வாலிபர் சங்க செயலாளருக்கும் கொலை மிரட்டல்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தொடர்சியான போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிலும் பல முக்கிய போராட்டங்களை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இதனிடையே சமீபத்தில், அமைதியாக நடைபெறும் போராட்டத்தை சில அமைப்புகள் சீர்குலைக்க முயல்வதாகவும் அவர்களை ஒடுக்கும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது எனவும் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ரகீம் என்பருக்கும் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில குழு அலுவலத்திற்கு வந்த கடிதத்தில், “கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் ரகீம் ஆகிய இருவரையும் வீடு புகுந்து வெட்டிக் கொல்வோம்” எனக் குறிப்பிட்டிருந்தது.

Also Read: #CAAProtest இஸ்லாமியர்களுக்காக உணவு சமைத்து வழங்கும் இந்துக்கள்... வண்ணாரப்பேட்டையில் நெகிழ்ச்சி!

இதனையடுத்து இது பற்றி ரகீம் திருவனந்தபுரம் காவல்துறை கமி‌ஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், முதல்வருக்கும் தனக்கும் மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியிருந்தார். இந்தச் சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.