India

“மேற்கு வங்கத்தை டெல்லியாகவோ, உ.பியாகவோ மாற்ற அனுமதிக்க மாட்டேன்” - மம்தா பானர்ஜி திட்டவட்டம்!

மோடி அரசின் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கடுமையாக எதிர்த்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு குடியேறியவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள்தான் என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் காலியாகஞ்ச் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மம்தா பானர்ஜி, வங்க தேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறிய மக்கள் அனைவரும் இந்திய குடிமக்களே அவர்கள் தாராளமாக வாக்களித்து பிரதமரை, முதலமைச்சரை தேர்ந்தெடுக்கலாம்.

இங்கிருந்து உங்களை யாரும் வெளியேற்ற முடியாது. அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தை ஒருபோதும் டெல்லியாகவோ, உத்தர பிரதேசமாகவோ மாற்ற அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார்.

இது வங்காளம் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். டெல்லியில் நடந்த வன்முறையைத் தடுக்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்கு உரியது எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: “மேற்கு வங்கத்தில் வன்முறை முழக்கம்: பா.ஜ.கவினர் வெட்கமே இல்லாமல் பேசுகிறார்கள்” - அமித்ஷாவை சாடிய மம்தா!

முன்னதாக, சி.ஏ.ஏ-ஐ அமல்படுத்த மாட்டோம் என்றும், என்.ஆர்.சி, என்.பி.ஆர்-ஐ நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் பல அதிரடி முடிவுகளை எடுத்து அம்மாநில சட்டமன்றத்தில் மம்தா பானர்ஜி தீர்மானமாக நிறைவேற்றியது தேசிய அளவில் வரவேற்பைப் பெற்றது.