India

”பா.ஜ.க அரசின் கலாச்சார படையெடுப்பு”: தமிழக கோயில்களை தொல்லியல்துறை வசம் விடக்கூடாது-வலுக்கும் எதிர்ப்பு!

பா.ஜ.க அரசு, தங்களது சித்தாந்தத்தைப் பரப்புவதற்காக பல்வேறு மொழிகளின், இனங்களின் பண்பாடு, கலாச்சாரங்களை சிதைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது, சிந்து நாகரீகத்திற்கு சரஸ்வதி சிந்து எனப் பெயர் சூட்டி இந்துத்வத்தை புகுத்துவது என பண்பாட்டுத் திரிப்புகளை மேற்கொண்டு வரும் பா.ஜ.க தொல்லியல் துறையின் மூலம் பாரம்பரிய அழிப்பைச் செய்ய முயன்றுவருகிறது.

இந்நிலையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புரதான கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு, தமிழக தொல்லியல் துறை ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள தமிழக முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சாமிநாதன், “தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை தமிழக தொல்லியல் துறையாலும், இந்து சமய அறநிலையத்துறையாலும் சிறப்பாக பராமரிக்க, பாதுகாக்க முடியும்.

மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலில் இருந்த இராஜராஜன், லோகமாதேவி சிலைகள் திருடப்பட்டபோது, அது பற்றி எந்த கவலையும் இல்லாமல், மீட்கவும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர்.

தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை மத்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; இது கலாச்சார படையெடுப்பின் ஒரு பகுதி.” என கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு, தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் ஒடிசா கோனார்க் கோயில் பற்றி மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், “ஒடியாவின் பெருமை மிகுந்த கோனார்க் சிற்பங்கள் தொல்லியல் துறையால் 40% மாற்றப்பட்டு வெறும் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத்தொல்லியல் துறையின் கீழ்தான் தமிழ்நாட்டின் பாரம்பரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள், நிர்வகிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க அரசின் இம்முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு.

Also Read: "கிராமக் கோவில் திருவிழாக்கள் நடத்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்" - வைகோ கோரிக்கை!