India

“அரசு நிலத்தையே OLX-ல் விற்க முயற்சி” : அதிர்ந்துபோன இந்து அறநிலையத்துறை! #CyberCrime

நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. போலிஸார் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் போதிய கண்காணிப்பு இல்லாததால் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பலர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல இணையதளத்தில் அரசு நிலத்தை விற்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி பி.பி.சாலை 2 வது தெருவில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக 561 சதுர அடி இடத்தில் வீடு உள்ளது.

முகமது காசிம் என்பவர் சுமார் 50 ஆண்டுகளாக அங்கு வாடகைக்கு குடியிருந்து வருகிறார். பிப்ரவரி 26-ம் தேதி இந்த இடத்தை 30 லட்ச ரூபாய்க்கு விற்க உள்ளதாக சாதிக் பாட்சா என்பவர் OLX தளத்தில் விளம்பரம் செய்துள்ளார். இதனால் பலரும் முகமது காசிம் வீட்டிற்கு வந்து விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து முகமது காசிம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் செயல் அலுவலர் நற்சோணையிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செயல் அலுவலர் நற்சோணை ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட ஐஸ் அவுஸ் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சாதிக் பாட்சாவை போலிஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: இராணுவ அதிகாரி எனக் கூறி OLX மூலம் பல கோடி மோசடி : தீரன் பாணியில் மோசடி கும்பலை கைது செய்த போலிஸ்! #Crime