கோப்பு படம்
India

“டெல்லி வன்முறையில் தொழில்முறை ரவுடிகள்” : கள்ளத் துப்பாக்கிகள், 350 குண்டுகள் கண்டெடுப்பு!

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறை உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது டெல்லி போலிஸார் துணையுடன் இந்துத்வா கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொல்லப்பட்டவர்களில் 30 பேரை மட்டுமே போலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல்களை உறவினரிடம் ஒப்படைக்காமலும் டெல்லி போலிஸார் இழுத்தடிப்பதாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளர்.

கோப்பு படம்

இந்நிலையில், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தீ வைக்கப்பட்டும், ஆசிட் வீசப்பட்டும், கொடூர ஆயுதங்களால் தாக்கப்பட்டும், குத்தப்பட்டும் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தாக்குதலாலும் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி வன்முறையாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் வரை துப்பாக்கியால் சுடப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 82 பேரின் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன எனும் தகவல் காவல்துறை மற்றும் மருத்துவத் துறை வட்டாரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோப்பு படம்

மேலும், இந்தக் கலவரத்தின் போது உள்ளூரைச் சேர்ந்த தொழில்முறை ரவுடிகள் பலரை பணம் கொடுத்து அழைத்துவைந்து வன்முறையில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்கள் கள்ளத் துப்பாக்கிகள் மூலம் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 350 துப்பாக்கிக் குண்டுகள், கள்ளத் துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளதாகவும், அந்த குண்டுகள் 32 எம்.எம், 9 எம்.எம், 315 எம்.எம் துப்பாக்கிகளுக்கு உரியவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பெயர் சொல்லவிரும்பாத போலிஸார் ஒருவர் தகவலை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, வன்முறையின்போது பொதுமக்கள் உதவி கேட்டு டெல்லி காவல்துறைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சுமார் 11,500-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், டெல்லி காவல்துறை அதை திட்டமிட்டு பொருட்படுத்தவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “மதவெறியைத் தூண்டும் பா.ஜ.கவில் இனி இருக்கமுடியாது”- டெல்லி கலரவத்தால் கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை!