India
“திருமணமான 11 நாட்களிலேயே வன்முறையில் கொல்லப்பட்ட இஸ்லாமிய இளைஞர்” : வடகிழக்கு டெல்லியின் மயான காட்சி!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சி.ஏ.ஏ ஆதரவாளர்களுக்கும், சி.ஏ.ஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களை சூறையாடி அங்கு இந்து அமைப்புகளின் கொடியை நிறுவி அராஜகப் போக்கை கடைபிடித்துள்ளது இந்துத்வா கும்பல். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் கைகட்டி டெல்லி போலிஸ் வேடிக்கை பார்த்ததும், வன்முறையாளர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் போலிஸார் செயல்பட்டதும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் மூலம் தெளிவானது.
இதையடுத்து போலிஸார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தைத் தடுக்க முயற்சித்தனர். ஆனாலும் தொடர்ந்த வன்முறையால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயமடைந்தவர்கள் மற்றும், இறந்தவர்களில் பெரும்பகுதியினர் உடல் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ளனது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.
இந்நிலையில், திருமணம் நடந்து 11 நாட்களே ஆன இளைஞர் ஒருவர் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வழகிழக்கு டெல்லியின் குரு தேஜ் பகதூர் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ஃபாக் ஹுசைன். இவர் மத ரீதியான வன்முறையில் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அஷ்ஃபாக் ஹுசேன் தாயார் ஹஸ்ரா கூறுகையில், “அஷ்ஃபாக் ஹுசைனுக்கு கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்றுதான் திருமணம் ஆனது. ஹுசைன் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும், அவற்றில் மூன்று குண்டுகள் நெஞ்சில் பாய்ந்ததாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்போது என் மருகளுக்கு நான் என்ன பதில் சொல்வது? அவளது எதிர்காலம் என்னவாகும்? சிரித்துப் பேசிய நணபர்களே தங்களுக்கு எதிராக இருப்பதாக உயிரிழக்கும் முன்பு என்னிடம் சொல்லி வேதனை அடைந்தான் ஹுசைன்” என கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.
திருமணமாகி 11 நாட்களிலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!