India

டெல்லி வன்முறைக்கு காரணமான பா.ஜ.கவினர் மீது FIR பதிவுசெய்ய ஒரு மாதம் அவகாசம் - உயர்நீதிமன்றம் ஆணை!

டெல்லி வடகிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிறன்று தொடங்கிய காவி கும்பலின் பயங்கரவாதம் 3 நாட்களுக்கு நீடித்தது. இதனால், 35 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடி வருகின்றனர்.

அதிலும், இந்துவா, முஸ்லிமா என தேடித் தேடி குறிபார்த்து தங்களுடைய வன்மத்தை விதைத்தும் வன்முறையை நீட்டித்தும் வருகின்றனர் பா.ஜ.கவின் குண்டர்கள். இப்படி இருக்கையில், டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

Also Read: "எப்போது FIR போடுவீர்கள்? நகரமே தீக்கிரையான பிறகா?” - டெல்லி போலிஸை விளாசிய ஐகோர்ட்!

இந்த வழக்கு நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலிஸை சரமாரியாக சாடிய நீதிபதி முரளிதர், வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பா.ஜ.க தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்திவைத்தார்.

உத்தரவிட்ட 12 மணிநேரத்திற்குள் நீதிபதி முரளிதரை பஞ்சாப், ஹரியான உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து தனது வேலையை காட்டியுள்ளது மோடி அரசு. இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரு சில வெறுப்பு பேச்சை மட்டும் வைத்து முடிவுக்கு வந்துவிட முடியாது. கலவரம் தொடர்பான வீடியோக்களை பார்த்து முடிவெடுக்க உகந்த சூழல் தற்போது இல்லை. ஆகையால் வெறுப்பு பேச்சு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளார்.

அதேசமயம், பா.ஜ.க தலைவர்கள் பேசியதுதான் கலவரத்துக்கு காரணம். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், அதற்குக் காரணமாக இருந்தவர்கள் அமைச்சராக இருந்தாலும் தெருக்களில் இழுத்துச் சென்று அனைவருக்கும் அடையாள காட்டவேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா, அபய் வர்மா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக முடிவெடுக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கியதோடு, வழக்கில் மத்திய அரசையும் சேர்க்கும் மத்திய உள்துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், எடுக்கப்பட்ட முடிவுகளை எழுத்து மூலம் தாக்கல் செய்யவும் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.