India

“பா.ஜ.க தலைவர்களை காப்பாற்றவே முரளிதர் இடமாற்றம்: அதிகார போதையில் ஆடும் மோடி அரசு” - காங். குற்றச்சாட்டு!

டெல்லியில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைக்கு யார் காரணம் என விசாரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை டெல்லி நீதிமன்றம் விசாரணை செய்தது.

அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதர் மற்றும் தல்வந்த் சிங் அமர்வு, வன்முறையைத் தூண்டும் வகையில் பா.ஜ.கவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் ஆகியோர் பேசிய வீடியோக்களை பார்க்கவில்லையா என போலிஸ் தரப்பிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு போலிஸ் தரப்பு இல்லை என்றதும் கோபமடைந்த நீதிபதி முரளிதர், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவல்துறை அதிகாரி ராஜேஷ் தியோ உள்ளிட்டோர் முன்னிலையில் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் பேசியதை ஒளிபரப்பியுள்ளார்.

உண்மையான வன்முறையாளர்களை பாரபட்சமின்றி கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது எனக் குறிப்பிட்டு, பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா உள்ளிட்டோர் மீது FIR பதியவேண்டும் என போலிஸுக்கு உத்தரவிட்டனர்.

நீதிபதி முரளிதரை திடீர் இடமாற்றம் செய்தும், வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்தும் மத்திய பா.ஜ.க அரசு உத்தரவிட்டது அரசியல் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அதிகார போதையில் தலைகால் புரியாமல் மோடி அரசு நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க தலைவர்களை காப்பாற்றவே முரளிதரை பணியிடமாற்றம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இன்னும் எத்தனை பேரை இதுபோன்று மோடி அரசால் பணியிடமாற்றம் செய்துவிட முடியும்?

மோடி அரசு நீதிமன்றங்களை குறிவைப்பது இது ஒன்றும் புதிதல்ல. முரளிதர் பணியிட மாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி பார் கவுன்சிலும் நீதிபதி இடமாற்றத்திற்கு தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

Also Read: “பா.ஜ.கவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்” : மோடி அரசின் அராஜக நடவடிக்கை!