India

"பா.ஜ.க சதியே டெல்லி வன்முறைக்குக் காரணம் : உள்துறை அமைச்சர் எங்கே சென்றார்?” - சோனியா காந்தி கண்டனம்!

டெல்லி கலவரத்துக்கு மத்திய அரசும், உள்துறை அமைச்சருமே பொறுப்பு என குற்றம்சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “டெல்லியில் நடந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த வன்முறைகளுக்கு மத்திய பா.ஜ.க அரசே பொறுப்பேற்க வேண்டும். வன்முறைக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும்.

பா.ஜ.க தலைவர்கள் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். டெல்லி கலவரத்துக்கு பின்னணியில் பா.ஜ.கவின் சதி உள்ளது. டெல்லியில் வன்முறை நடக்கும்போது நாட்டின் உள்துறை அமைச்சர் எங்கே சென்றார்? டெல்லியின் முதல்வர் எங்கே சென்றார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “டெல்லியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வன்முறை தொடர்பாக உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லையா? துணை இராணுவத்தை முன்கூட்டியே அழைக்காதது ஏன்?” என அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Also Read: #DelhiBurns : “இஸ்லாமியருக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வருவேன் என்ற ரஜினி எங்கே?”- தி.மு.க எம்.பி கேள்வி!