India

தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க முயலும் நிர்பயா குற்றவாளி : மனநிலை பாதிப்பா? - விசாரணை ஒத்திவைப்பு!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை நிறைவேற்ற விடாமல் குற்றவாளிகள் நால்வரும் தனித்தனியே கருணை மனு தாக்கல் செய்தனர். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மார்ச் 3-ம் தேதி நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு திகார் சிறையில் உள்ள வினய் ஷர்மா, சுவரில் மோதி காயம் ஏற்படுத்திக்கொள்ள முயன்றுள்ளார். மேலும் தனது கையை முறித்துக் கொள்ளவும் முயன்றிருக்கிறார். இதனை சி.சி.டி.வியில் கண்ட சிறைக் காவலர்களை அவரை தடுத்து நிறுத்தி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க உத்தரவிடக் கோரி நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வினய் ஷர்மாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் டெல்லி திகார் சிறை கண்காணிப்பாளரை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதற்கிடையே, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்த திகார் சிறையின் அதிகாரி, வினய் ஷர்மாவுக்கு எந்த மனநல பாதிப்பும் இல்லை. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒழுங்காகவே பதிலளித்திருந்தார் எனக் கூறியுள்ளார்.

Also Read: ”நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்க வேண்டும்”: துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை கோரிக்கை!