India

நாட்டிலேயே முதலிடம் பிடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது பாய்ந்தது பொது பாதுகாப்பு சட்டம்- பா.ஜ.க அரசின் அராஜகம்!

ஜம்மு காஷ்மீரில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசல் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமைப் பணிக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தவர் ஷா பைசல். இவர் சொந்த மாநிலமான காஷ்மீரிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து 2019 மார்ச் 16-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அப்பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது பா.ஜ.க அரசு. இந்த நடவடிக்கையின்போது பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் கருத்துக் கூறி வந்தார் ஷா பைசல். இதையடுத்து, ஆகஸ்ட் 13-ம் தேதி பைசலை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்த போலிஸார் அவரை ஸ்ரீநகர் எம்.எல்.ஏக்கள் விடுதியில் வீட்டுக்காவலில் அடைத்தனர்.

இந்நிலையில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஷா பைசல் மீது பொது பாதுகாப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்த வித விசாரணையும் இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷா பைசலும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பா.ஜ.க அமைச்சர் மாலையிட்ட அம்பேத்கர் சிலையை கங்கை நீர் கொண்டு சுத்தப்படுத்திய RJS தொண்டர்கள்!