India

"எதிர்கருத்து சொல்வோரை அடக்குவது ஜனநாயகத்தின் நெஞ்சில் குத்துவதற்குச் சமம்”- உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு!

“எதிர்கருத்துக்களை அடக்குவது ஜனநாயகத்தின் நெஞ்சில் குத்துவதற்கு சமம்” என உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பா.ஜ.க அரசை எச்சரித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வொன்றில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “ஜனநாயகத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில், மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்கள் மீது தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறது. இது ஜனநாயக மதிப்புகளை பாதிக்கும்.

எதிர்ப்பையும், மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் அரசு போலிஸாரை கொண்டு அடக்குவது என்பது ஜனநாயக சட்டத்தை மீறுவதாகும். பன்முகத் தன்மை கொண்ட ஒரு நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மதிப்புகள் மற்றும் அடையாளங்களின் மீது ஏகபோகம் கொண்டாட முடியாது.

DY Chandrachud

கருத்து வேற்றுமை என்பதும், எதிர்கருத்து என்பதும், ஜனநாயகத்தின் ‘சேஃப்டி வால்வு’ (Safety Valve) போன்றது. எதிர்ப்புகளை அடக்குவதும், தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதும் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும்.

எதிர்க்கருத்துக்களை அடக்குவது ஜனநாயகத்தின் நெஞ்சில் குத்துவதற்கு சமம். பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் சட்டத்துக்கு உட்பட்டுப் பாதுகாத்து உறுதி செய்யவேண்டியது அரசின் கடமை." எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "ஜனநாயகம் காக்கப்படும் எனும் நம்பிக்கையோடு இருக்கிறது தமிழகம்” - டெல்லிக்குப் பறந்த 2 கோடி கையெழுத்துகள்!