India

“தனியார் ரயில்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம்”: மோடி அரசின் ஆபத்தான அறிவிப்பு!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது, ரயில்களை தனியார் இயக்குவது, பராமரிப்பது, பயணச்சீட்டு உள்ளிட்டவற்றை தனியார் விற்பனை செய்ய அனுமதிப்பது, சரக்கு ரயில்களை தனியாருக்கு திறந்து விடுவது போன்ற அபாயகரமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்கும் நடவடிக்கைக்கு ரயில்வேதுறை ஆயுத்தமாகி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது குறிப்பிட்டார்.

இந்நிலையில், பயணிகள் ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், ”தனியாரால் இயக்கப்படும் பயணிகள் ரயில்களுக்கு கட்டண வரம்பு நிர்ணயிப்பது குறித்து இதுவரை அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை. விமானப் போக்குவரத்துத்துறையில் உள்ளது போல, பயணிகள் ரயில்களை இயக்கவிருக்கும் தனியார் ரயில் நிறுவனங்கள் சந்தை நில வரத்தைச் சார்ந்து தாங்கள் விரும்பும் எந்தக் கட்டணத்தை யும் நிர்ணயித்துக் கொள்ளலாம்.

Also Read: தமிழகத்தில் 11 வழித்தடங்களில் தனியார் ரயில்... கட்டண உயர்வு பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம்!

பயணிகள் நலன் கருதி இந்திய ரயில்வேயில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 1,500 முதல் 2000 ரயில்கள் இணைக்கப்பட வுள்ளது. அந்த அளவுக்கு கூடுதல் ரயில்களை அரசால் நிர்வகிக்க முடியாது என்பதாலேயே தனி யாரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

அரசின் இந்த அறிப்பால் ஏழை மக்கள் நடுத்தர மக்கள் ரயில் பயணிக்கமுடியாத சூழலே உருவாகும். அரசின் இந்த முடிவை திரும்ப பெறவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: “இந்திய ரயில்வேயில் தனியார்மயம் தீவிரம்”: 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்கள்- அச்சத்தில் பொதுமக்கள்!