India

“மக்கள் நலனே பிரதானம்” : குடிநீர் பாட்டில் விலையைக் குறைத்த கேரள அரசு - அடுத்த அதிரடியில் பினராயி விஜயன்!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சி செய்து வருகிறது. எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் அசராமல் இருந்து மாநில மக்களின் நலனுக்காக அயராது பணியாற்றி வருகிறது பினராயி அரசு.

பெண்கள், குழந்தைகள், கல்வி மேம்பாடு, இணைய வசதி, பெற்றோர்களைக் கைவிடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை, தொழிலாளர் நலன் என கம்யூனிச சித்தாந்தங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கேரள அரசு விளங்குகிறது. பல்வேறு மாநில அரசுகளுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.

Also Read: வாட்டி வதைக்கும் வெயில்: “தொழிலாளர்களுக்கு பகல் 12 முதல் 3 மணி வரை கட்டாய ஓய்வு” : கேரள அரசு அசத்தல்!

இந்நிலையில், குடிநீர் பாட்டில்கள் மூலம் நடைபெறும் சுரண்டல்களுக்கும் தற்போது வேட்டு வைத்துள்ளது கேரள அரசு. சராசரியாக ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில உரிமையாளர்கள் 30 ரூபாய்க்கு மேலும் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இதனைக் கருத்தில்கொண்டு, குடிநீர் பாட்டில் உற்பத்தியாளர்களுடன் கேரளாவின் உணவுத்துறை அமைச்சர் திலோத்தமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, குடிநீர் பாட்டில்கள் லிட்டருக்கு ரூ.13க்கு மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

உரிமையாளர்கள் 15 ரூபாயாக நிர்ணயிக்க கோரிக்கை வைத்தனர். ஆனால், அதனை நிராகரித்த அமைச்சர் 13 ரூபாய்க்கே விற்கவேண்டும் என தீர்க்கமாக கூறியிருக்கிறார். இதனையடுத்து, குடிநீர் பாட்டில் விலை நிர்ணயம் குறித்து முதல்வரிடத்தில் தெரிவித்திருக்கிறார்.

பின்னர், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் குடிநீர் பாட்டிலை கொண்டுவந்து அனைத்து குடிநீர் பாட்டில்களும் ஒரு லிட்டருக்கு 13 ரூபாய்க்கே விற்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Also Read: “பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை - 15,650 பேர் மீது வழக்குப் பதிவு” : கேரள அரசு அதிரடி!

மேலும், குடிநீர் பாட்டில்கள் பி.எஸ்.ஐயால் அங்கீகரிக்கப்பட்டு தரச்சான்று பெற்றிருக்க வேண்டும் என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.