India

“ராமர் கோவில் அறக்கட்டளையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடமில்லையா?” - பொங்கிய உமாபாரதி!

ராமர் கோயில் கட்டுவது தொடர்பான அறக்கட்டளை குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அப்போது பேசிய அவர், “ராமர் கோயில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி தீர்த்தக்‌ஷேத்ரா அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அறக்கட்டளை சுதந்திரமாக முடிவுகளை மேற்கொள்ளும்.” என்று தெரிவித்தார்.

இந்த அறக்கட்டளையில் ஒரே ஒரு தலித் இடம்பெற்றுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கூட இந்த அறக்கட்டளையில் இடம்பெறவில்லை. இந்த அறக்கட்டளையின் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடம்பெறாததற்கு பா.ஜ.க தலைவர் உமாபாரதி அதிருப்தி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையில் ஓ.பி.சி முகம் வேண்டும் எனும் கல்யாண் சிங்கின் கோரிக்கையை ஆதரித்துள்ளார் உமாபாரதி.

“நான் உட்பட பல பிற்படுத்தப்பட்டவர்கள் அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறோம். அதற்கு அங்கீகாரம் தரும் விதமாக இந்த அறக்கட்டளையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரையும் இடம்பெறச்செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார் உமாபாரதி.

பா.ஜ.க-வில் பார்ப்பனரல்லாதோரின் நிலை எல்லா காலகட்டத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறது. பா.ஜ.கவின் செயல் வீராங்கனையான உமாபாரதி, பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறித்துப் புழுங்கியிருக்கிறார். அதனாலேயே கட்சியின் உயர்பதவிகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் உத்தர பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங், தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்பதால் தன்னை முதல்வர் பதவியிலிருந்து இறக்க, பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக்கியது பா.ஜ.க எனக் குற்றம்சாட்டி இருக்கிறார்.

பா.ஜ.க-வின் இந்தப் பார்ப்பன பாரம்பரியம் இன்று நேற்றல்ல; தொன்று தொட்டுத் தொடர்வது தான். கட்சியின் மீதான விமர்சனங்களைக் களைய மட்டும் பிற்படுத்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோரையும் பயன்படுத்திக் கொள்வதாக அக்கட்சியில் இருந்த பலருமே குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்கும், ராமர் கோவில் கட்டும் அதிகாரத்தை சட்டரீதியாகப் பெறும் வரையும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க அறக்கட்டளையில் சேர்க்காமல் விட்டுள்ளது கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்ட வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

Also Read: ஷாஹீன்பாக்கில் வெறுப்பை விதைக்க நினைத்த பா.ஜ.க - டெபாஸிட்டை காலி செய்து விரட்டிய வாக்காளர்கள்!