India

“கட்டணத்தை 10,000 ரூபாய் உயர்த்துவதா?” : புதுச்சேரி பல்கலைக்கு எதிராகக் கொதிக்கும் எம்.பி ரவிக்குமார்!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தைத் திரும்ப பெறக் கோரி மாணவர்கள் ஒருவாரகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகம், கல்விக் கட்டணத்தை குறைக்காமல் தனது போக்கிலே செயல்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி துணைவேந்தருக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “தங்கள் பல்கலைக்கழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டண உயர்வானது மாணவர்களைக் கோபமடையச் செய்திருப்பது மட்டுமின்றி பல்கலைக்கழக வளாகத்தின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கணினி அறிவியல் படிப்புக்கு 225 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைப்போலவே எம்.ஏ, எம்.காம், எம்.எஸ்.டபிள்யூ முதலான படிப்புகளுக்கும் சுமார் 10,000 ரூபாய் கட்டணம் உயர்த்தி இருக்கிறீர்கள். இதனால் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவு பாழாக்கப்படும்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கங்களில் சமத்துவம், சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதற்கேற்ப அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வைத் திரும்பப் பெற்று ஏழை மாணவர்களுக்கு உதவுமாறு வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “300% கட்டண உயர்வு?” : கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராகக் கொந்தளிக்கும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள்!