India
“6 இரட்டை வழிப்பாதைகளுக்கு வெறும் ரூ.6,000 ஒதுக்கீடு- மோடி அரசின் துரோகம் அம்பலம்”: சு.வெங்கடேசன் ஆவேசம்!
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், 4 புதிய இரட்டை வழிப்பாதைகளுக்கு வெறும் 4,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்து தென்னக இரயில்வேக்கான நிதியை குறைத்து மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து ஞாயிறன்று தெரிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து தென்னக இரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பத்திரிகை குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களின் விபரங்களைச் சொல்லி அவைகள் அனைத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் வடக்கு இரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு சுமார் 7,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று நான் கூறினேன். இவை எதையும் அந்தச் செய்திக் குறிப்பு மறுக்கவில்லை. இதன் மூலம் தென்னக இரயில்வேயில் தமிழகத்துக்கான பத்து புதிய வழித்தடங்களுக்கு 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம் இரட்டை வழிப்பாதைக்கான திட்டங்களைப் பற்றிய விபரங்களை செய்திக் குறிப்பில் விளக்கியுள்ளனர். “உப்பு எங்கே என்று கேட்டால் இதோ பருப்பு இருக்கிறது” என்று கூறுகின்றனர்.
தமிழகத்தில் இரட்டை வழிப்பாதைக்கான ஆறு திட்டங்களைக் குறிப்பிட்டு 826 கிலோ மீட்டருக்கு 8,501 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக இச்செய்தி குறிப்பு கூறுகிறது. அவர்கள் கூறும் ஆறு திட்டத்தில், தர்மாவரம்-பாகலா-காட்பாடி இரட்டைப் பாதை 290 கிலோ மீட்டர் 2,900 கோடி திட்டம் என்று கூறுகிறார்கள்.
இது தென் மத்திய இரயிவேயின் திட்டம். இந்த வழித்தடத்தில் சுமார் 90 சதவிகிதம் ஆந்திர மாநிலத்துக்கானது. அதேபோல ஓசூர்- ஓமலூர் இரட்டைவழிப்பாதைக்கு 147 கிலோ மீட்டர் 1,470 கோடி திட்டம் என்று கூறுகிறார்கள்.
இது தென்மேற்கு இரயில்வேயின் திட்டம், இந்த வழித்தடத்தில் சுமார் 90 சதவிகிதம் கர்நாடக மாநிலப் பகுதியாகும். தென் மத்திய இரயில்வே மற்றும் தென்மேற்கு இரயில்வேயின் திட்டங்களை தென்னக இரயில்வே தனது திட்டமாக எப்படி கூறுகிறது? என்று முதலில் விளக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட இரண்டினைத் தவிர மற்ற நான்கு இரட்டை வழிப் பாதை திட்டங்களான 1. காட்பாடி – விழுப்புரம், 2. சேலம் - கரூர்- திண்டுக்கல், 3. ஈரோடு-கரூர். 4.சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் ஆகிய நான்கு மட்டுமே தமிழகத்துக்கான தென்னக இரயில்வேயின் புதிய இரட்டைவழிப்பாதை திட்டங்களாகும்.
தென்னக இரயில்வே செய்திக்குறிப்பில் கூறியுள்ள 826 கிலோமீட்டர் நீளத்துக்கான இரட்டைப் பாதைக்காக 8501 கோடி திட்டம் என்பது உண்மையல்ல, மாறாக 381 கிலோ மீட்டர் நீளத்துக்கான 4,100 கோடி மதிப்பிலான திட்டம்தான் தென்னக இரயில்வேயின் தமிழகத்துக்கான புதிய இரட்டை வழிப்பாதை திட்டங்களாகும்.
இதில் அதிர்ச்சிதரத் தக்க செய்தி என்னவென்றால் இவர்கள் சொல்கிற இரட்டை வழிப்பாதைக்கான இந்த ஆறு புதிய திட்டங்களுக்கும் இந்த ஆண்டு (2020-21) தலா 1,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே குறிப்பிட்ட பத்து புதிய வழித்தடத்துக்கு பத்தாயிரம் ரூபாயும், இப்போது தென்னக இரயில்வே குறிப்பிட்டுள்ள ஆறு இரட்டை வழிப்பாதைக்கான திட்டங்களுக்கு ஆறாயிரம் ரூபாயும் தான் 2020-21 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடத்துக்கான திட்டங்களிலும் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதிய இரட்டை வழிப்பாதைக்கான திட்டத்திலும் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!