India
முசாபர்பூர் வன்கொடுமை வழக்கு : முக்கிய குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை - டெல்லி நீதிமன்றம் அதிரடி!
பீகார் மாநிலம், முசாபர்பூர் பகுதியில் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்தக் காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடம் டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது. மேலும் இந்த விவகாரத்தில் காப்பகத்தின் நிறுவனர் பீகார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பிரிஜேஷ் தாக்கூர் உட்பட பலருக்கும் தொடர்ப்பு இருப்பதாக தெரியவந்தது.
இதனையடுத்து இதுதொடர்பான அறிக்கையை ஒன்றைத் தயார் செய்து கடந்த 2018ம் ஆண்டு, மே 26ம் தேதி பீகார் அரசுக்கு டாடா நிறுவனம் அளித்தது. டாடா நிறுவனத்தின் அறிக்கையை பெற்றுக்கொண்ட அரசு, அதுதொடர்பாக உடனடி விசாரணை நடத்தி காப்பக்கத்தில் உள்ள குழந்தைகளை அரசு காப்பகத்துக்கு மாற்றியது.
மேலும் இதுதொடர்பான வழக்கில் பிரிஜேஷ் தாக்கூர், காப்பக ஊழியர்கள் என 11 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் போலிஸார் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று வழக்கு சி.பி.ஐக்கு மாறியது.
அதேபோல் பீகார் நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் டெல்லியில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாறியது. இந்த வழக்கு விசாரணை கூடுதல் நீதிபதி சௌரப் குல்ஸ்ரேஸ்தா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை, குற்றச்செயல், குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 20 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையில் ஒருவர் மட்டும் பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 19 பேர் குற்றவாளிகள் என கடந்த மாதம் 20ம் தேதியன்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
இதில் பிரிஜேஷ் தாக்கூரை முதல் குற்றவாளியாக அறிவித்து, 10 பெண்கள் உட்பட 19 பேரை குற்றவாளிகளாக அறிவித்து வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பை ஜனவரி 28ம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும் என்று கூறி ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சௌரப் குல்ஸ்ரேஸ்தா, முதல் குற்றவாளியான பிரிஜேஷ் தாக்கூருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், உடந்தையாக இந்த முக்கிய குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சமூகவலைதளவாசிகளும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?
-
அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !
-
பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !
-
நீட் தேர்வெழுத வந்தவர்களுக்கு குடிநீர் வழங்காத தேர்வு மையம்: களத்தில் உதவிய போலீஸார் - குவியும் பாராட்டு!
-
தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் : ஹரியானாவில் மேலும் ஒரு பெண் விவசாயி உயிரிழப்பு !