India

“ICU-வில் இருக்கும் இந்தியப் பொருளாதாரம் மீளப் போவதில்லை” : நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம் ஆவேசம்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபிறகு நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் ஒருவாரகாலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “இந்தியப் பொருளாதாரம் ஐ.சி.யூ-வில் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொருளாதாரத்தை சரிசெய்யக்கூடிய ரகுராம் ராஜனை அனுப்பிவிட்டீர்கள், அரவிந்த் சுப்ரமணியத்தையும் அனுப்பிவிட்டீர்கள். உர்ஜித் பட்டேலையும் அனுப்பிவிட்டீர்கள்.

குறிப்பாக பிரச்னையை தீர்க்கக்கூடிய ஒருவர் கூட உங்களிடம் இல்லை. எதிர்க்கட்சிகளையும் ஆலோசனை கேட்கமாட்டீர்கள். காங்கிரஸ் கட்சி உங்களுக்கு தீண்டத்தகாத ஒன்றாகிவிட்டது. மற்ற கட்சிகளை நீங்கள் என்ன நிலையில் வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

ஐ.சி.யூ-வில் இருக்கும் பொருளாதாரத்தை மீட்க உங்களிடம் வழி எதுவும் இல்லை. எனவே பொருளாதாரம் மீளப் போவதில்லை. திறமையற்ற டாக்டர்களால் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது.

இந்த மத்திய அரசு பிரச்னையை சீர் செய்யாமால், சுற்றி நின்றுகொண்டு ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்று கோஷமிட்டால் ஒன்றும் நிகழப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “நிதி அமைச்சரை அழைக்காமல் நிதிநிலை ஆய்வுக்கூட்டத்தை நடத்துவதா?” - மாநிலங்களவையில் வைகோ சரமாரி தாக்கு!