India

“நாட்டுக்கே நல்ல சேதி சொல்லியுள்ளது டெல்லி” - பா.ஜ.கவை வீழ்த்திய அர்விந்த் கெஜ்ரிவால் பேச்சு!

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தொடக்கம் முதலே முன்னணியில் இருந்து வரும் ஆம் ஆத்மி, மொத்தமுள்ள 70 இடங்களில் 63 இடங்களைப் பிடித்துள்ளது. பா.ஜ.க 7 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

வெற்றிக்குப் பின்னர் இதுகுறித்துப் பேசியுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால், “மூன்றாவது முறையாக என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி, என்னை தங்களது மகனாக நினைத்தவர்களுக்கும், எங்களுக்காக வாக்களித்தவர்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி டெல்லியில் வசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர்களுக்குக் கிடைத்த வெற்றி.

புதிய அரசியலுக்கான பாதைஉருவாக டெல்லி தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமைந்துள்ளன. இது புதிய அறிகுறி. அனைவருக்கும், ஒரு தெளிவான செய்தியை டெல்லி அனுப்பியுள்ளது. உண்மையான வளர்ச்சிக்காக டெல்லி மக்கள் வாக்களித்துள்ளனர். இது டெல்லியின் வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் வெற்றியும் கூட.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தொண்டர்கள் யாரும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதைத் தவிர்ப்பதற்காக அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: #LIVEupdates | டெல்லியில் மீண்டும் ‘ஆம் ஆத்மி’ ஆட்சி! - தேர்தல் முடிவுகள்