India

“ஆவணத்தில் இருக்கு; நேரில் இல்லை” : மாயமான 4.5 லட்சம் கழிப்பறைகள் - பா.ஜ.க அரசின் மிகப்பெரும் ஊழல்!

2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பினர் ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டப்படும் என உறுதியளித்தது.

ஸ்வச் பாரத் திட்டத்தில் தன்னிறைவு அடைந்துவிட்டதாக பா.ஜ.க அரசு கூறிவரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கழிப்பறை கட்டும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்ட 4.5 லட்சம் கழிப்பறைகள் காணாமல் போயுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான அப்போதைய மத்திய பிரதேச பா.ஜ.க அரசு, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அதிகம் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகளில் அரசு சார்பில் இலவச கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கியது.

2 கட்டங்களாக நிதி ஒதுக்கப்பட்டு 2018ஆம் ஆண்டிற்குள் 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கழிப்பறைக்கான அஸ்திவாரம் போடப்பட்டதும் முதற்கட்ட நிதியும், கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு முன் வீட்டு உரிமையாளர் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமர்ப்பித்த பின்னர் அடுத்தகட்ட நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் நேரில் சென்ற அதிகாரிகள் குழுவினர், ஒரு கழிப்பறை கூட இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தியதில், கழிப்பறை கட்டாமலேயே வேறு வீட்டின் கழிப்பறை முன் நின்று புகைப்படம் எடுத்து நிதி பெற்றது தெரியவந்துள்ளது.

மேலும், கிராமவாசிகள் சிலர் தங்கள் பெயரில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது தங்களுக்கே தெரியாது என்று அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அரசிடம் உள்ள ஆவணங்களின்படி ரூபாய் 540 கோடி செலவில் 4.5 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. ஆனால், கிராமங்களில் கழிப்பறைகள் இல்லை.

4.5 லட்சம் கழிப்பறைகள் மாயமாகியுள்ள நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 540 கோடி பணம் எங்கே போனது எனும் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்க அதிகாரிகள் குழு ஆய்வுப் பணியை துவங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: 2 ஆண்டுகள் கழித்து சூடுபிடிக்கும் மெகா ஊழல் விவகாரம் : வாக்கி - டாக்கி முறைகேட்டில் கூட்டுச்சதி?