India

“சொல்வது ஒன்று; செய்வது ஒன்று” - மக்களவையில் பிரதமர் மோடியை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி!

காவிரி டெல்டா பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் விவசாய நிலம் அடியோடு பாழ்படும் என்பதால் அதனைக் கைவிட வேண்டும் என்று மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று மக்களவையில் வலியுறுத்தினார்.

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, விவசாயத் திட்டங்களுக்கு குறைவான நிதியை ஒதுக்கிவிட்டு இரண்டே ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இரட்டிப்பு விலையை வழங்குவதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சாதி வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்கும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர், பெரியார் சமத்துவபுரங்களை ஏற்படுத்தியதைச் சுட்டிக்காட்டிய டி.ஆர்.பாலு, தற்போது அரசு மக்களைப் பிரித்தாளும் விதமாக சட்டங்களைக் கொண்டுவருகிறது எனக் குற்றம்சாட்டினார்.

‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று முழங்கும் பிரதமர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் என்ன? குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சிலரை மட்டும் புறக்கணிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

File Image

தொடர்ந்து பேசிய அவர், “குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை என்.பி.ஆர் மூலம் பகிரங்கப்படுத்தவோ, அறிந்து கொள்ளவோ அரசுக்கு உரிமை இல்லை. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்தார்.

மேலும், பயிர்க் கடன், பயிர்க் காப்பீடு விளை பொருளுக்கு உரிய விலை ஆகியவை கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டிய டி.ஆர்.பாலு, புயல் தாக்குதலுக்கு உரிய மீட்பு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

விவசாயிகளின் திருவிழாவான பொங்கல் கொண்டாட்டத்தின் போது, காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க, அமைச்சர் டெண்டர் விடுக்கிறார் என எம்.பி. டி.ஆர். பாலு பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும், காவிரி டெல்டா பகுதிகளில் எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் விவசாய நிலம் அடியோடு பாழ்படும் என்பதால் மத்திய பா.ஜ.க அரசு அத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Also Read: தி.மு.கவின் தீவிரத் தொண்டர் மறைவுக்கு தி.மு.க தலைவர் உருக்கமான இரங்கல்!