India

‘பாரத் மாதா கி ஜெய்’ என முழக்கமிட்டபடி மனைவியின் தலையை ஊர்வலமாக கொண்டுச் சென்ற கணவர்; உ.பியில் பயங்கரம்!

உத்தர பிரதேசத்தில் மனைவியை கொன்று அவரது தலையை கையில் எடுத்துக்கொண்டு பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்ற நபர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாரபங்கி மாவட்டத்தில் உள்ள பஹதூர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் ராவத். இவரது மனைவி ரஜனி. இவர்களுடைய பெண் குழந்தை ஒன்று 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டது.

இதனையடுத்து, ரஜனிக்கும் அகிலேஷ் ராவத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கிறது.

வாய் தகராறின் போது அகிலேஷ் மனைவி ரஜனியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ரஜனி அங்கேயே உயிரிழந்திருக்கிறார். பின்னர், கட்டுக்கடங்காத ஆத்திரத்தால் உயிரிழந்த ரஜனியின் தலையை வெட்டி எடுத்துள்ளார் அகிலேஷ் ராவத்.

அதன் பிறகு, ரஜனியை வெட்டியை தலையை எடுத்துக்கொண்டு ஒன்றரை கிலோ மீட்டருக்கும் மேலாக ஊர்வலமாக எடுத்துச் சென்றதோடு தேசிய கீதம் பாடியும், பாரத் மாதா கி ஜெய் என முழக்கமிட்டபடி சென்றிருக்கிறார்.

காவல் நிலையத்தை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த அகிலேஷை மடக்கிய போலிஸார் அவரது கையில் இருந்த தலையை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் அகிலேஷ் முரண்டு பிடித்துள்ளார். ஒரு வழியாக தலையை பறித்த போலிஸார் அகிலேஷை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய எஸ்.பி அரவிந்த் சதுர்வேதி, குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளார்.