India

“குடியரசுத் தலைவர் உரை முழுக்க வெற்று முழக்கங்களே”- பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து கொதிக்கும் ப.சிதம்பரம்!

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இக்கூட்டம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகப் பேசினார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த அரசின் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும் என்றும் பேசினார்.

குடியரசுத் தலைவர் மோடி அரசின் செய்தித் தொடர்பாளர் போல் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதாக சமூகவலைதளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்களே குடியரசுத் தலைவர் உரையில் உள்ளதாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசுத் தலைவர் இந்தாண்டின் அரசாங்கத்தின் முதல் கொள்கை அறிக்கை பற்றி உரையாற்றினார். அதில் கடுமையான பொருளாதார சரிவை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது குறித்துத் தேடினேன்.

ஆனால் நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதுவும் அதில் சொல்லப்படவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்கள் மட்டுமே அதில் இருந்தது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், மேக்ரோ-பொருளாதார நிலை குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.

அதேபோல், வேலையிழப்பு, வேலையின்மை அதிகரிப்பு, நுகர்வோர் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் மூடப்பட்டது ஆகியவை குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

குறிப்பாக, குடியரசுத் தலைவரின் உரையில் முதலீடு குறைந்து வருவது மற்றும் நிறுத்தப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை குறித்து ஒன்றுமில்லை. இதனால் உற்பத்தித் துறையின் எதிர்காலம் இருண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான அறிக்கையில் கடந்த 6 மாதங்களில் அது ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள 75 லட்சம் மக்கள் மீது அநீதியைக் குவிப்பதில் அரசு உறுதியாக இருப்பதையும் காட்டுகிறது.

அதேபோல், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் நடத்திய போராட்டங்களை பொருட்படுத்தாமல் அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான தனது கடினமான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜனநாயக எதிர்ப்பை அரசாங்கம் நிராகரிப்பது போராட்டங்களை தீவிரப்படுத்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: #BudgetSession | #CAA எதிர்ப்பு போராட்டத்துடன் துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்!