India

ஆட்டோவோடு நேருக்கு நேர் மோதி கிணற்றுக்குள் உருண்ட அரசுப்பேருந்து : 26 பேர் பலி- நாசிக் அருகே கோர விபத்து!

மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண்கள் உட்பட 26 பேர் பலியாகினர். மேலும், இந்த விபத்தில் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மும்பையிலிருந்து 200 கி.மீ தொலைவில் மாலேகான்-தியோலா சாலையில் உள்ள மேஷிபாட்டாவில் நேற்று மாலை 4 மணியளவில் மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (MSRTC) நாசிக் மாவட்டத்தின் கல்வான் நோக்கி விரைவாகச் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்த்திசையில் இருந்து வந்த ஆட்டோ மோதியதில் இரு வாகனங்களும் நிலை தடுமாறின. கடுமையாக மோதிக்கொண்டதால், நிலைகுலைந்த பேருந்து, ஆட்டோவையும் இழுத்துக்கொண்டு சாலையோரத்தில் அமைந்திருந்த கிணற்றில் பாய்ந்தது.

பேருந்தில் பயணித்த பெரும்பாலானோர் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். கிணற்றில் இருந்து 26 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் காவல்துறை, தீயணைப்புப் படை மற்றும் உள்ளூர் குழுக்களின் உதவியுடன் மீட்புப் பணி நடந்து வருகிறது. கிணற்றின் தண்ணீரை பம்புகள் மூலம் வெளியேற்றி, கிணற்றிலிருந்து பேருந்து வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், "கல்யாண் பணிமனையைச் சேர்ந்த பேருந்தின் ஓட்டுநர் பி.எஸ்.பச்சாவ்தான் விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: Viewers wants to know : நடுவானில் அர்னாப்பை வறுத்தெடுத்த ஸ்டாண்ட்அப் காமெடியன்! -(வைரல் வீடியோ)