India

கேரளாவில் திருநங்கைக்கு திருமணம் - சிறப்பு திருமண சட்டத்திற்கு குவியும் பாராட்டு!

சமூக நீதிக்கும், சுய மரியாதைக்கும் முன்னுதாரணமாக இருப்பதில் தென் இந்தியாவின் தமிழ்நாடும், கேரளாவும் எப்போதும் முன்னணியில் இருக்கும். அது பெண்கள், ஆண்கள் என எவராக இருந்தாலும் சம உரிமை வழங்குவதில் திண்ணமாக இருப்பர்.

துணையை இழந்தவர்களுக்கான மறுமணத்தை ஆதரிப்பது தொடங்கி கல்வி, தொழில் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதேபோல திருநங்கைகளுக்கான உரிமைகளை பெற்றுத்தருவதிலும் முதன்மை மாநிலங்களாகவே தமிழகமும், கேரளமும் திகழ்கிறது.

Also Read: "மாற்றத்திற்கு வித்திடுவதில் தி.மு.கவே தொடக்கப்புள்ளி": திருநங்கை ரியா வெற்றி குறித்து கனிமொழி பெருமிதம்!

அந்த வகையில் தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் நாமக்கல் திருச்செங்கோடு ஒன்றியத்தில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதுபோல, கேரளாவில் சமீபத்தில் 60 வயது நிரம்பிய முதிய ஜோடிகள் திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான திருநங்கை ஹைதி சாதியா அதே மாநிலத்தைச் சேர்ந்த ஆதர்வ் மேனன் என்பவரை குடியரசு தினமான நேற்று மணமுடித்துள்ளார். இதில் ஹைதி, மேக்கப் ஆர்ட்டிஸ்டான திருநங்கை ரெஞ்சு ரஞ்சிமாரின் வளர்ப்பு மகளாவார். அதேபோல ஆதர்வ், திருநங்கை ஜோடிகளான இஷான் மற்றும் சூர்யாவின் வளர்ப்பு மகனாவார்.

தனியார் நிறுவனத்தில் கணக்காளராக ஆதர்வ் பணிபுரிந்து வருகிறார். சிறப்பு திருமண சட்டத்தின் படி கேரளாவில் நடைபெறும் 4வது திருநங்கை திருமணம் இதுவாகும். ஹைதி, ஆதர்வுக்கு பலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் சொல்லி வருகின்றனர். அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: ‘கோச்சானிக்கு வயசு 67- லட்சுமிக்கு வயசு 66’ : திருமணத்திற்கு காத்திருக்கும் காதல் ஜோடி- இது கேரள விநோதம்!