India

”நேதாஜி சிலையில் பா.ஜ.க கொடி கட்டுவதை ஏற்கமுடியாது” - நேதாஜியின் பேரன் சந்திர போஸ் கண்டனம்!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தில் அவரது சிலையில் பா.ஜ.க கொடியை கட்டியதற்கு நேதாஜியின் பேரனும், பா.ஜ.க தலைவருமான சந்திர குமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக தீவிர வழியைத் தேர்ந்து போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது பிறந்த தினம் இன்று. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜ.க-வினர், நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்ததோடு, அவரது சிலையின் கையில் பா.ஜ.க கொடியை கட்டிவிட்டனர்.

பா.ஜ.க கொடியேந்திய சுபாஷ் சந்திர போஸ் சிலையின் புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சையானது. பா.ஜ.கவினரின் இச்செயலுக்கு, மேற்குவங்க பாஜ.க துணை தலைவரும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்திர குமார் போஸ் கூறியதாவது, “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்தக் கட்சியும் நேதாஜியை சொந்தமாக்க முடியாது. அவரது சிலையில் கொடியைக் கட்டிய பா.ஜ.கவினரின் செயலை நான் கண்டிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், “நான் 2016ம் ஆண்டு பாஜ.கவில் சேர்ந்தபோது, மோடி, அமித்ஷா ஆகியோருடன் கலந்துரையாடினேன். அப்போது, அனைவரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற நேதாஜியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் அரசியலில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்தேன்.

இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட மதத்தவரை விலக்கும் வேலைகள் நடக்கின்றன. இதுபோன்ற நிலை தொடர்ந்தால், பாஜ.கவில் எனது எதிர்காலம் குறித்து மறுபரிசீலனை செய்யும் சூழல் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மத அடிப்படையிலான குடியுரிமை திருத்தச் சட்டத்தை சந்திர குமார் போஸ் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். “பெரும்பான்மை இருப்பதற்காக அச்சுறுத்தும் அரசியலை கையாளக்கூடாது” என அவர் பா.ஜ.க அரசை விமர்சித்துப் பேசி வருவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: “தகுந்த நேரம் கிடைத்ததும் பா.ஜ.க-வில் இருந்து பிரிந்து செல்வோம்” : அ.தி.மு.க அமைச்சர் சூசக பேச்சு!