India

ஜூன் 1 முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல் : மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்!

நாடு முழுவதும் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை நுகர்வோர் வாங்கிக் கொள்ளும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்கு “கூட்டாட்சித் தத்துவத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் பிற்போக்கான காரியம்” என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் நாடு முழுவதும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் பயனாளர்கள் பலனடைய முடியும்.

பணி நிமித்தமாக நாட்டின் எந்தப் பகுதிக்கு தொழிலாளா்கள் இடம்பெயர நேரிட்டாலும் அவா்கள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெற முடியும். ஏற்கனவே, முதற்கட்டமாக ஜனவரி 1ம் தேதி முதல் 12 மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Also Read: “ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை” அறிவிப்பை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை !