India

“சட்டப்பேரவையில் உறுதியளித்து விட்டு மோடி அரசின் அறிவிப்பிற்கு மௌனம் சாதிப்பதா?” - CPIM கண்டனம்!

ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் இது சம்பந்தமாக மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை எனவும் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் புதிய அறிவிப்பு தமிழக மக்களையும் குறிப்பாக டெல்டா விவசாயிகளையும் மனம் பதற வைத்துள்ளது. மோடி அரசு, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முன் அனுமதி தேவையில்லை எனக் கூறியிருப்பது டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

ஏற்கனவே, ஹைட்ரோகார்பனுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியபோது விவசாயிகள் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த காரணத்தினால் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

தற்போதைய அறிவிப்பினால், ஹைட்ரோகார்பன் திட்டம் டெல்டா விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். அவர்களது வாழ்வாதாரங்களை முற்றிலும் நாசப்படுத்திவிடும். இதனால் தான் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் இதனை அனுமதிக்கக்கூடாது என டெல்டா விவசாயிகளுடன் இணைந்து குரல் கொடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டின் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை என சட்டப்பேரவையில் உறுதியளித்த அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பிறகு மௌனம் சாதிப்பது டெல்டா விவசாயிகளை கடுமையாக ஆத்திரமடைய வைத்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களைச் செயற்படுத்துவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள்” : வைகோ