India

முசாபர்பூர் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: 19 பேர் குற்றவாளிகள் - டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பீகார் மாநிலம், முசாபர்பூர் பகுதியில் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்தக் காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடம் டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

மேலும் இதில் காப்பகத்தின் நிறுவனர் பீகார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பிரிஜேஷ் தாக்கூர் உட்பட பலருக்கும் தொடர்ப்பு இருப்பதாக இதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து கடந்த 2018ம் ஆண்டு, மே 26ம் தேதி பீகார் அரசுக்கு டாடா நிறுவனம் அளித்தது.

டாடா நிறுவனத்தின் அறிக்கையை பெற்றுக்கொண்ட அரசு, அதுதொடர்பாக உடனடி விசாரணை நடத்தி காப்பக்கத்தில் உள்ள குழந்தைகளை அரசு காப்பகத்துக்கு மாற்றியது. மேலும் இதுதொடர்பான வழக்கில் பிரிஜேஷ் தாக்கூர், காப்பக ஊழியர்கள் என 11 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் போலிஸார் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று வழக்கு சி.பி.ஐக்கு மாறியது. அதேபோல் பீகார் நீதிமன்றத்தில் இருந்த வழக்கும் டெல்லியில் போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாறியது.

இந்த வழக்கை கூடுதல் நீதிபதி சவுரவ் குல்ஸ்ரேஸ்தா தலைமையில் நடைபெற்று வந்தது. பின்னர் இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமை, குற்றச் செயல், குழந்தைகளைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 20 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையில் ஒருவர் மட்டும் பின்னர் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேரும் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Also Read: பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற மறுத்ததால் சிறுமியின் தாயார் வெட்டிக்கொலை- உ.பியில் வெறிச்செயல்! Video

இதில் பிரிஜேஷ் தாக்கூரை முதல் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 10 பெண்கள் உட்பட 19 பேரை குள்ளவாளிகளாக அறிவித்து வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பை ஜனவரி 28ம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும் என்று கூறி ஒத்திவைத்தனர்.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் அடுத்து வரவிருக்கும் தீர்ப்பில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: “கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகள் உயிருடன் இருக்கிறார்கள்” - சிபிஐ தெரிவித்த ‘பகீர்’ தகவல்!