India

FasTag முறையால் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் 29% அதிகரிப்பு - அதிர்ச்சி தகவல்!

ஃபாஸ்டேக் முறையால், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் 29% அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருக்கும்போது வீணாகும் எரிபொருளால், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்தது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், ஆன்லைன் முறையில் கட்டணம் வசூலிக்க வசதியாகவும், ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது.

வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபாஸ்டேக் சிப்பை ஸ்கேன் செய்வதன் மூலம், டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வாகனம் கடந்து செல்ல விரைவாக அனுமதிக்கப்படுவதால் காத்திருக்கும் நேரம் குறையும் எனக் கூறப்பட்டது.

ஆனால், ஃபாஸ்டேக் முறையால் காத்திருக்கும் நேரம் 29% அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய சுங்கச்சாவடி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2019 நவம்பர் 15 முதல் டிசம்பர் 14 வரை, 488 சுங்கச்சாவடிகளில், வாகனம் ஒன்றுக்கு சராசரி காத்திருப்பு நேரம் 7 நிமிடங்கள் 44 விநாடிகளாக இருந்துள்ளது.

டிசம்பர் 15 2019 முதல், 2020 ஜனவரி 14 வரையிலான காலகட்டத்தில் சராசரி காத்திருப்பு நேரம் 9 நிமிடங்கள் 57 விநாடிகளாக அதிகரித்துள்ளது. அனைத்து வாகனங்களும் இன்னும் ஃபாஸ்டேக் முறைக்கு மாறாததும், ஆன்லைன் பரிவர்த்தனையில் ஏற்படும் கோளாறுகளுமே காத்திருப்பு நேரம் அதிகரித்திருப்பதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஃபாஸ்டேக் முறையை அவசர அவசரமாக அமல்படுத்தியதன் விளைவாகவே இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதாக தொழில்நுட்ப நிபுணர்களும், வாகன ஓட்டிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்

Also Read: நடைமுறைக்கு வராதபோதே ‘FasTag' கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடி : தட்டிக்கேட்டவர்கள் மீது சரமாரி தாக்குதல்!