India

“மோடி ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி பாகிஸ்தானை விடக் குறைவாக இருக்கும்” : உலக வங்கி அதிர்ச்சி தகவல்!

பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் காணப்படும் மோசமான நிலை, பொருளாதார சரிவுக்கு மிக முக்கிய காரணமாகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்திய ஜி.டி.பி 5 சதவிகித வளர்ச்சியைத்தான் எட்ட முடியும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய அரசுத் துறையான புள்ளியியல் அலுவலகம் கூறியிருந்தது.

இதனையடுத்து உலக வங்கி தற்போது வெளியிட்டிருக்கும் தனது உலகளாவிய பொருளாதார அறிக்கையில், 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகவே இருக்கும்; இது வங்கதேச நாட்டின் வளர்ச்சியை விடவும் குறைவாகும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக 2008-09 நிதியாண்டின்போது, 3.1 சதவிகித பொருளாதார வளர்ச்சிதான் இந்தியாவில் இருக்கும் என உலக வங்கி கணித்தது. அதன்பிறகு, இப்போதுதான், 2வது முறையாக, மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியை, உலக வங்கி கணித்துள்ளது.

மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைவிட வங்கதேசம் முன்னிலையில் இருக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல, 2020 காலண்டர் ஆண்டில், தெற்காசிய பிராந்தியத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: பொருளாதார மந்தநிலையை சமாளிக்க முடியாமல் திணறும் மோடி அரசு : ஜி.எஸ்.டி வரி விகிதத்தை உயர்த்த திட்டம்?

அந்த அடிப்படையில், தெற்காசிய வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டாலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும். இதனால் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை காட்டிலும் கீழே சென்றுவிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் 3 சதவிகிதம், இலங்கை 3.3 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.