India

கார்ப்பரேட் முதலாளிகளைச் சந்தித்து வரும் மோடி... இந்த பட்ஜெட்டும் அவர்களுக்கானது தானா?

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறார். நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் நிலையில், தாக்கல் செய்யப்படவிருக்கும் இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதில் முகே‌‌ஷ் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் பாரதி மிட்டல், கவுதம் அதானி, ஆனந்த் மகிந்திரா, அனில அகர்வால், வேணு சீனிவாசன், சந்திரசேகரன் உள்ளிட்ட தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

நாட்டின் பிரதமர் முன்னணி தொழிலதிபர்களைச் சந்திப்பதில் குறையொன்றும் இல்லை. கடுமையான பொருளாதார மந்தநிலையால், சிறு குறு தொழிலதிபர்களும், வணிகர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பட்ஜெட்டுக்கு முன்னர் அவர்களின் கருத்துகளை எல்லாம் அறிய விரும்பாத பிரதமர் மோடி, கடந்த சில நாட்களாக பல்வேறு தொழில்துறையைச் சேர்ந்தவர்களை சந்தித்து மட்டும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள சூழலில் நாட்டின் முக்கிய தொழிலதிபர்கள் உடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது பா.ஜ.க அரசு தொடர்ந்து கார்ப்பரேட்களுக்கு சாதகமான அரசாகச் செயல்படுவதையே காட்டுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பா.ஜ.க அரசின் மக்கள் விரோத சட்டங்களால் நாடு முழுவதும் போராட்டக் களமாகியிருக்கும் நிலையிலும், பொருளாதாரச் சீர்கேட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்திருக்கும் நிலையிலும் பா.ஜ.க அரசு கார்ப்பரேட்களின் நலனுக்காகவே தொடர்ந்து செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. வரவிருக்கும் பட்ஜெட் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: தனியார்மயமாக்கலை எதிர்த்து போராட்டம் நடக்கும்போதே, பெல் கம்பெனி பங்குகளை விற்க ஒப்புதல் அளித்த மோடி அரசு!