India

ஐ.ஏ.எஸ் கனவை உதறிவிட்டு எம்.எல்.ஏ ஆன வக்கீல் : ஜார்க்கண்ட் தேர்தலில் சாதனை படைத்த இவர் யார்?

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பர்காகோ தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார் யோகேந்திர பிரசாத்தின் மகள் அம்பா பிரசாத். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அம்பா பிரசாத் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்குச் செல்லும் இளம் உறுப்பினர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார்.

இதே பர்காகோ தொகுதியில், 2009ம் ஆண்டு யோகேந்திர பிரசாத் போட்டியிட்டு வென்று ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பின்னர், 2014ம் ஆண்டு இவருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரில் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், 2014ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில், அவருக்குப் பதிலாக அவரது மனைவி நிர்மலா தேவி, பர்காவோ தொகுதியில் போட்டியிட்டார். அப்போது, அம்பா பிரசாத் சட்டப்படிப்பை முடித்து டெல்லியில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு உதவியாக தேர்தல் பணியாற்ற வந்தவர் ஜார்க்கண்ட் அரசியல் சூழல்களால் ஐ.ஏ.எஸ் கனவை உதறிவிட்டு அங்கேயே தங்கினார்.

யோகேந்திர பிராசாத் மற்றும் நிர்மலா தேவி மீது விவசாயிகள் பேரணியை முன்னின்று நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் பல மாதங்கள் சிறையில் கழித்து வந்த நிலையில், ஜார்க்கண்டில் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் இவர்களது மகள் அம்பா பிரசாத்துக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இவருக்காக ராகுல் காந்தியும் பிரசாரம் மேற்கொண்டார். இறுதியில் அவர் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் அம்பா பிரசாத்.

ஒரே தொகுதியில் தந்தை, தாய் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது மகள் சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். ஐ.ஏ.எஸ் கனவை உதறிவிட்டு ஜார்க்கண்ட் மக்களுக்காக அரசியல் களம் புகுந்த அம்பா பிரசாத்தை கொண்டாடுகின்றனர் அவரது தொகுதி மக்கள்.

Also Read: ஜார்க்கண்ட் முதல்வர் சுயேச்சையிடம் தோல்வி முகம் : நாடு முழுவதும் வெளுக்கும் பா.ஜ.க காவி சாயம் !